எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

சிண்டி ஹெஸ் காஸ்பர்கட்டுரைகள்

மருக்கள் மற்றும் அனைத்தும்

“இங்கிலாந்தின் பாதுகாவலர்” என்றழைக்கப்பட்ட ஆலிவர் க்ரோம்வெல், பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு படைத்தளபதி. அந்நாட்களில், இதுபோன்ற முக்கிய நபர்கள் தங்கள் உருவப்படங்களை வரைந்துக்கொள்வது வழக்கம். அதுபோல க்ரோம்வெல்லின் உருவப்படத்தை வரைந்த ஓவியர், அவரின் முகப்பொலிவை குறைக்கும் குறைகளை தவிர்த்துவிட்டு, அவரை அழகாய் வரைந்தார். அவரைப் பிரியப்படுத்தும் ஓவியரின் அச்செயலை அவர் விரும்பவில்லை.  அவர் அந்த ஓவியரைப் பார்த்து, “என் முகத்தில் இருக்கும் மருக்கள் மற்றும் அனைத்தோடும் என் முகத்தை வரையுங்கள், இல்லையேல் உங்களுக்கு நான் கூலி தரமாட்டேன்” என்று எச்சரித்தாராம். 

அந்த ஓவியரும் அதின்படியே வரைந்தாராம். எனவே வரைந்து முடிக்கப்பட்ட கிராம்வெல்லின் உருவப்படத்தில் சில முகப்பருக்கள் அப்பட்டமாக இருக்கும். ஆனால் இன்று சமூக வலைதளங்களில் பதிவிடப்படும் புகைப்படங்களில், முகப்பருக்கள் நீக்கப்பட்டும், மறைக்கப்பட்டும் பின்னரே பிரசுரிக்கப்படுகிறது.

 “மருக்கள் மற்றும் எல்லாம்” என்ற பதம், இன்று மக்கள் தங்களை, தங்கள் தப்பிதங்கள், குறைகள், சிந்தனை என்று அனைத்தையும் உள்ளது-உள்ளது போலவே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்த பரவலாய் பயன்படுத்தப்படுகிறது. அது சிலவேளைகளில் மிகவும் கடினம். ஆனால் நாம் நம் உள்ளான மனிதனை கூர்ந்து கவனிக்கும்போது நம் குணாதிசயங்களில் இருக்கும் சில தவறான காரியங்களைக் கண்டுபிடிக்கக்கூடும். 

தேவன் நம்முடைய ‘மருக்களை’ மன்னிக்கிறவராயிருக்கிறார். கொலோசெயர் 3ஆம் அதிகாரத்தில் மற்றவர்களை மன்னிப்பதற்கு நாம் போதிக்கப்படுகிறோம். நேசிக்கமுடியாத, கடினமான மக்களிடத்தில் கூட பொறுமையாகவும், தயவாகவும், இரக்கத்துடனும் செயல்படும்படிக்கு அப்போஸ்தலன் பவுல் நமக்கு அறிவுறுத்துகிறார். தேவன் நம்மை மன்னிப்பது போல நாமும் மற்றவர்களை மன்னிக்கும்படியான இருதயம் உடையவரகளாய் இருக்க நம்மை உற்சாகப்படுத்துகிறார் (வச.12-13). கிறிஸ்துவின் உதாரணத்தை முன்வைத்து, தேவன் நம்மை நேசித்தது போல மற்றவர்களை அவர்களின் ‘மருக்கள் மற்றும் எல்லாவற்றோடும்’ நேசிக்க நாம் போதிக்கப்படுகிறோம்.   

இனிமையான நித்திரை

என் தோழி இரவில் விழித்துக்கொள்ளும் போது, அவள் "என் இயேசுவே நான் உம்மை நேசிக்கிறேன்" என்ற பாடலின் வரிகளை நினைத்துக்கொள்வாள். அதை அவள் "நடு இரவின் பாடல்" என்றழைப்பாள் ஏனெனில் அவள் தேவனுடைய வாக்குத்தத்தங்களையும், அவரை நேசிக்க அவள் கொண்டிருந்த அநேக காரணங்களையும் அவளுக்கு அந்த பாடல் நினைவூட்டியது.

வாழ்க்கையில் தூக்கம் என்பது ஒரு அவசியமான, ஆனால் சிலசமயங்களில் மழுப்பலான பகுதியாகவும் உள்ளது. சிலநேரம் நம் வாழ்வில் அறிக்கையிடாத பாவங்களை நம் சிந்தைக்கு கொண்டுவரும் பரிசுத்த ஆவியானவரின் சத்தத்தை உணர்வோம், அல்லது நம் வேலை, நம் உறவுகள், நம் பொருளாதாரம், நம் ஆரோக்கியம், அல்லது நம் பிள்ளைகள் போன்றவற்றை நினைத்து கவலைப்பட ஆரம்பிப்போம். உடனே நிச்சயமற்ற, கவலை நிறைந்த ஒரு எதிர்காலம் நம் எண்ணங்களில் வட்டமிட துவங்கும். நாம் சுதாகரித்து நேரம் கடந்திருக்கும் என்றெண்ணி கடிகாரத்தை பார்ப்போம் ஆனால் படுத்து சில நிமிடங்களே ஆகியிருக்கும்.

நீதிமொழிகள் 3:19-24 ல், நாம் தேவனுடைய ஞானம், புத்தி மற்றும் நல் ஆலோசனை ஆகியவற்றை காத்துக்கொள்ளும்போது நித்திரையின் நற்பலன்களையும் நாம் பெறுவோமென்று சாலொமோன் ராஜா நம்மை அறிவுறுத்துகிறார். உண்மையில் அவர், "அவைகள் உன் ஆத்துமாவுக்கு ஜீவனும்...நீ படுக்கும்போது பயப்படாதிருப்பாய்; நீ படுத்துக்கொள்ளும்போது உன் நித்திரை இன்பமாயிருக்கும்."(வ) என்பதில் உரிமை பாராட்டினார்.

ஒருவேளை நம் அனைவருக்குமே ஒரு "நடு இரவின் பாடலோ", ஜெபமோ, அல்லது வேத வசனமோ மெல்லிய குரலில் ஒலித்து நம்மை நம்முடைய குழப்பமான சிந்தனைகளிலிருந்து மீட்டு தேவனையும், அவரது குணாதிசயத்தையும் உற்றுக்கவனிக்கும் சிந்தனைக்கு கொண்டுசெல்ல தேவைப்படுகிறது. சுத்தமான மனசாட்சியும், தேவனின் உண்மைத்தன்மைக்கு நன்றி நிறைந்த இதயமும், அன்புமே நமக்கு இனிமையான நித்திரையை கொண்டுவரும்.

கற்றுக்கொள்ள விருப்பம்

இளைஞர் ஒருவரிடம் நீங்கள் எப்படி பத்திரிக்கை நிருபரானீர்கள் என்று கேட்டபோது, அவருடைய கல்வியின் மீது அவருடைய தாயாருக்கு இருந்த அர்ப்பணிப்பு உணர்வுதான் காரணம் என்று பதிலளித்தார். அவரின் அம்மா தினந்தோறும் சுரங்கப்பாதையில் பயணம் செய்யும்போது, அங்கே கிடக்கும் மீதமுள்ள செய்தித்தாள்களைச் சேகரித்துக் கொண்டுவந்து தருவாராம். அவருக்கு விளையாட்டு செய்திகளை விரும்பிப் படிக்க பிடிக்கும் என்றாலும், அந்த செய்தித்தாள்கள் அவருக்கு உலக அறிவை அறிமுகம் செய்து வைத்தது. இறுதியில், அவருக்கு இந்த குறிப்பிட்ட துறையில் ஆர்வம் ஏற்பட்டது. 

குழந்தைகள் இயற்கையாகவே கற்பதில் ஆர்வமுடனும் விருப்பத்துடனும் இருக்கிறார்கள். வேதாகமத்தை சிறுவயதிலேயே அறிமுகப்படுத்தும்போது, தேவனுடைய அசாதாரணமான வாக்குத்தத்தங்களும், வேதாகம கதாநாயகர்களின் உற்சாகமான சரித்திரங்களும் அவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தும். வேதாகம அறிவில் தேறும்போது, பாவத்தின் விளைவுகள், மனம் திரும்புதலுக்கான தேவை, தேவன் மீது வைக்கும் விசுவாசத்தால் ஏற்படும் மகிழ்ச்சி ஆகியவற்றைக் குறித்து தெளிவாய் புரிந்துகொள்வார்கள். உதாரணமாக, நீதிமொழிகளின் 1ம் அதிகாரம் ஞானத்தால் அடையும் நன்மைகளைப் பற்றி நேர்த்தியாய் அறிமுகப்படுத்துகிறது (நீதி. 1:1-7). ஞானத்தைக் குறித்த இந்த போதனைகள் நடைமுறை வாழ்க்கைப் பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கிறது. 

குறிப்பாய் ஆவிக்குரிய சத்தியங்களை கற்பதில் ஆர்வத்தை வளர்த்துக்கொள்வது விசுவாசத்தில் உறுதியாய் வளருவதற்கு வழிவகுக்கிறது. ஆண்டாண்டுகளாய் விசுவாசத்தில் நடக்கிறவர்களும் தங்களுடைய வாழ்க்கையில் இந்த தெய்வீக ஞானத்தை பெற்றுக்கொள்ள தொடர்ந்து பிரயாசப்படலாம். “புத்திமான் இவைகளைக் கேட்டு அறிவில் தேறுவான்" என்று நீதிமொழிகள் 1:5 ஆலோசனைக் கூறுகிறது. நாம் நமது இருதயத்தையும் மனதையும் அவருடைய வழிகாட்டலுக்கும் அறிவுறுத்தல்களுக்கும் திறந்து வைத்தால், தேவன் நமக்கு கற்றுக்கொடுப்பதை ஒருபோதும் நிறுத்தமாட்டார். 

வேதத்தை உதாரணப்படுத்துவது

டச்சு தேசத்தின் வீடுகளெங்கிலும் காணப்படும் நீலமும் வெண்மையும் கலந்த பீங்கான் ஓடுகள் டெல்ஃப்ட் என்னும் நகரத்தில் உருவாக்கப்பட்டவைகள். அவைகள் பொதுவாக நெதர்லாந்தின் பிரபலமான காட்சிகளான அழகான நிலப்பரப்புகள், எங்கும் நிறைந்த காற்றாலைகள் மற்றும் மக்கள் வேலை செய்யும், விளையாடும் காட்சிகள் அகியவற்றை பிரதிபலிக்கின்றன. 

19ஆம் நூற்றாண்டில் சார்லஸ் டிக்கன்ஸ் என்பவரால் எழுதப்பட்ட “எ கிறிஸ்மஸ் கேரல்” என்னும் புத்தகத்தில் இந்த பீங்கான் ஓடுகள் எவ்வாறு வேதாகமத்தை உதாரணப்படுத்துகிறது என்பதை விவரிக்கிறார். ஒரு டச்சுக்காரர் இந்த ஓடுகளைப் பயன்படுத்தி கட்டமைத்த குளிர்காயும் நெருப்பிடம் பற்றி அவர் கூறுகிறார். “அதில் காயீன் ஆபேல், பார்வோன் குமாரத்திகள், சேபாவின் ராணிகள்,... மற்றும் கடலில் பயணிக்கும் அப்போஸ்தலர்கள்” என்று அவர் வடிவமைத்துள்ளார். பல குடும்பங்களுக்கு இந்த நெருப்பிடம், குடும்பமாக அமர்ந்து வேதாகமத்தைக் கற்கும் இடமாகவும் கதைகளை பகிருவதற்கு ஏதுவாகவும் உள்ளது. தேவனுடைய குணாதிசயங்களான நீதி இரக்கம் மற்றும் கிருபை ஆகியவைகளை கற்றுக்கொள்ளமுடிகிறது. 

வேதாகமத்தின் சத்தியங்கள் இன்றும் ஏற்புடையதாயிருக்கிறது. சங்கீதம் 78, “பூர்வகாலத்து மறைபொருளை விவரித்து, நாம் கேள்விப்பட்டவைகள் மற்றும் பிதாக்கள் நமக்கு அறிவித்தவைகளை” (வச. 2-3) போதிக்கும்படிக்கு அறிவுறுத்துகிறது. மேலும் “கர்த்தரின் துதிகளையும் அவருடைய பலத்தையும், அவர் செய்த அவருடைய அதிசயங்களையும்” (வச. 4,6) பின்வரும் சந்ததிக்கும் அவர்களின் பிள்ளைகளுக்கும் சொல்லும்படிக்கு அறிவுறுத்துகிறது. 

தேவனுடைய துணையோடு, தேவனை முற்றிலும் கனம்பண்ணும் விதத்தில், வேதாகமத்தின் சத்தியங்களை அடுத்த தலைமுறையினருக்கு நேர்த்தியாகவும் தெளிவாகவும் வெளிப்படுத்தும் படைப்பாற்றல் கொண்ட வழிகளை நாம் கண்டறிவோம். 

மழைக்காலம்

கோவிட் தொற்றைக் கட்டுப்படுத்தும் பொருட்டு ஏற்படுத்தப்பட்ட முயற்சிகளினால் பல சிறு வியாபாரங்கள் வெகுவாய் முடங்கியது. முதலாளிகள் தங்கள் ஊழியர்களுக்கு எப்படி சம்பளம் கொடுப்பது, வாடகையை எப்படி செலுத்துவது, இந்த இக்கட்டிலிருந்து எப்படி மீள்வது என்று கவலைப்பட்டனர். இதுபோன்ற நலிவுற்ற வியாபரிகளுக்கு ஆதரவாக, ஒரு திருச்சபையின் போதகர் அவர்களுக்கு பண உதவி செய்ய முன்வந்தார். 

மற்ற போதகர்களையும் ஊக்குவிக்க எண்ணிய அவர், “ஒருவர் மழையில் நனைந்துகொண்டிருக்கும்போது, நாம் நம்மிடத்திலுள்ள மழைக்கால நிதியை வைத்துக்கொண்டு இளைப்பாறக்கூடாது” என்று வலியுறுத்தினார்.   

மழைக்கால நிதி என்பது நம்முடைய இயல்பான வருமானம் தடைபடும் நேரத்தில் அதை சமாளிப்பதற்காக சேகரித்து வைக்கக்கூடிய நிதி. நம்முடைய தேவைகளை மனதில் வைத்து செயல்படுவது இயல்பு என்றாலும், நம்முடைய தேவையைத் தாண்டி மற்றவர்களுக்கு சேவை செய்யும் தயாள குணம் உள்ளவர்களாய் இருக்கும்படிக்கு வேதம் நம்மை ஊக்குவிக்கிறது. நீதிமொழிகள் 11, “வாரியிறைத்தும் விருத்தியடைவாரும் உண்டு... உதாரகுணமுள்ள ஆத்துமா செழிக்கும்; எவன் தண்ணீர் பாய்ச்சுகிறானோ அவனுக்குத் தண்ணீர் பாய்ச்சப்படும்” (வச. 24-25) என்று நினைவுபடுத்துகிறது. 

இன்று உங்களுடைய வாழ்க்கையில் சூரியன் சற்று அதிகமாய் ஒளியூட்டுகிறதா? மற்றவர்களுடைய வாழ்க்கையில் மழை பெய்கிறதா என்று சுற்றிப் பாருங்கள். மற்றவர்களோடு தேவன் கொடுத்த ஆசீர்வாதங்களை பகிர்ந்துகொள்ளும்போது அவைகள் நம்முடைய வாழக்;கையில் பெருகத்துவங்கும். உதாரத்துவமாய் விரிந்த கரங்களை காண்பிப்பது, மற்றவர்களுக்கு நம்பிக்கையையும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவன் அவர்களை நேசிக்கிறார் என்னும் சத்தியத்தையும் பறைசாற்றும் மிக அழகான ஒரு வழி. 

உள்ளான உடைதல்

என்னுடைய இளம்பிராயத்தில் என்னுடைய தாயார் ஓர் சுவரோவியத்தை எங்களுடைய அறையின் சுவரில் வரைந்தார்கள், அது நெடுநாட்களாய் அங்கேயேயிருந்தது. அது தகர்க்கப்பட்ட ஒரு பழமையான கிரேக்க ஆலயம், அதின் ஓரத்தில் வெள்ளை நிற தூண்கள் நிற்க, நொறுக்கப்பட்ட நீருற்று குழாய்கள், தகர்க்கப்பட்ட சிலைகள் அந்த ஓவியத்தில் இடம்பெற்றிருந்தது. கிரேக்க கட்டடக்கலையின் பிரம்மாண்டத்தை நான் பார்த்துக்கொண்டிருந்தபோது, எது அந்த கோயிலை தகர்த்திருக்கவேண்டும் என்று யோசித்தேன். அந்த சிதைவுகளுக்குள் ஒரு காலத்தில் ஓங்கியிருந்த அந்த நாகரீகத்தின் செழிப்பையும் பிரம்மாண்டத்தையும் ஆர்வமாய் படிக்க ஆரம்பித்தேன்.

இன்று நம்மைச் சுற்றி நாம் காணும் பாவமான விரும்பத்தகாத சீரழிவுகள் நம்மை தொந்தரவு செய்யலாம். இந்த தேசங்களெல்லாம் தேவனை நிராகரித்ததுதான் அதற்கான காரணம் என்று நாம் சுலபமாய் சொல்லிவிடலாம். ஆனால் நம் பார்வையை உள்நோக்கி செலுத்தவேண்டாமா? நம்முடைய இருதயத்தில் உள்ளதை பொருட்படுத்தாமல் மற்றவர்களுடைய பாவ வழிகளை குற்றப்படுத்தும் நம்மை வேதம் மாயக்காரர்கள் என்று எச்சரிக்கிறது (மத்தேயு 7:1-5). 

சங்கீதம் 32, நம்முடைய பாவத்தைப் பார்த்து, அறிக்கையிட சவால்விடுகிறது. நம்முடைய பாவத்தை உணர்ந்து, அறிக்கையிட்டு, அந்த குற்றமனசாட்சியிலிருந்து விடுபட்டால், மெய்யான மனந்திரும்புதலின் மகிழ்ச்சியை நாம் அனுபவிக்கமுடியும் (வச. 1-5). தேவன் நமக்கு அளிக்கும் முழுமையான மன்னிப்பில் மகிழ்ந்திருப்பதோடு, பாவத்தின் பிடியில் சிக்கியிருக்கும் நபர்களுக்கும் அந்த நம்பிக்கையை கொடுக்க முயற்சிக்கலாம். 

ஜெபிக்கும் மனிதன்

என்னுடைய தாத்தா விசுவாசத்திலும் ஜெபத்திலும் உறுதியானவர் என்பதை என்னுடைய குடும்பத்தினர் நினைவுகூறுகின்றனர். ஆனால் அது எப்பொழுதும் அப்படி அல்ல. “நாம் சாப்பிடுவதற்கு முன் தேவனுக்கு நன்றி கூறப்போகிறோம்” என்று தன்னுடைய தகப்பனார் முதல்முறையாக தன்னுடைய குடும்பத்தினருக்கு அறிவித்ததை என் அத்தை நினைவுகூர்ந்தார். அவருடைய முதல் ஜெபம் சொற்பொழிவாற்றலுக்கு அப்பாற்பட்டிருந்தது. ஆனால் தாத்தா அடுத்த ஐம்பது ஆண்டுகளுக்கு இந்த ஜெபத்தைத் தொடர்ந்தார். அந்த நாள் முழுவதும் அடிக்கடி ஜெபித்துக்கொண்டிருப்பார். அவர் இறந்தப்பொழுது என்னுடைய கணவர் என் பாட்டிக்கு ஒரு ஜெபிக்கும் கரங்களின் அருங்காட்சிப் பொருளை கொடுத்து “தாத்தா ஒரு ஜெப வீரன்”என்று சொன்னார். தேவனைப் பின்பற்றவும் அவரோடு அனுதினமும் பேச அவர் எடுத்த முடிவு தாத்தாவை கிறிஸ்துவின் ஒரு உண்மையுள்ள ஊழியக்காரனாய் மாற்றியது. 

ஜெபத்தைக் குறித்து வேதாகமத்தில் அதிகமாக சொல்லப்படுகிறது. மத்தேயு 6:9-13ல் இயேசு தம்மை பினபற்றுகிறவர்களுக்கு ஒரு ஜெபத்தின் மாதிரியைக் கொடுத்து, தேவன், அவர் யாராயிருக்கிறாரோ அவரை மனமார்ந்த துதியோடு நெருங்கக் கற்றுக்கொடுத்தார். நம்முடைய விண்ணப்பங்களை தேவனிடத்தில் கொண்டு செல்லும்போது, அவர் நமக்கு “அன்றன்றுள்ள ஆகாரத்தை” தருவார் என்று விசுவாசிக்கிறோம் (வச. 11). நம்முடைய பாவங்களை நாம் அறிக்கை செய்யும்போது, அவரிடத்தில் மன்னிப்பையும், சோதனைகளைத் தவிர்க்க உதவியையும் கேட்கிறோம் (வச. 12-13).

ஆனால் கர்த்தர் கற்பித்த ஜெபம் மட்டும் அல்லாமல் (பரமண்டல ஜெபம்), “எந்தச் சமயத்திலும் சகலவித வேண்டுதலோடும்” (எபேசியர் 6:18) நாம் ஜெபிக்க வேண்டும் என்று தேவன் எதிர்பார்க்கிறார். நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையின் வளர்ச்சிக்கு ஜெபம் மிகவும் முக்கியமானது. மட்டுமல்லாமல் ஜெபம், நாம் தேவனோடு ஒவ்வொரு நாளும் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்க வாய்ப்பளிக்கிறது (1 தெசலோனிக்கேயர் 5:17-18).

தேவனிடம் பேச வேண்டும் என்ற வாஞ்சையினால் தாழ்மையுள்ள இருதயத்தோடு நெருங்கும்போது, அவரை இன்னும் அதிகமாய் நேசிக்கவும், அறிந்துக்கொள்ளவும் உதவி செய்வார்.

உன் கதை தேவனுக்குத் தெரியும்

என் சிநேகிதியுடனான மதிய உணவிற்கு பின், என் வீட்டிற்கு வரும் வழியில் அவருக்காய் சத்தமாய் தேவனிடத்தில் நன்றி சொன்னேன். நானே விரும்பாத என்னுடைய சில காரியங்களின் மத்தியிலும் அவள் என்னை நேசிக்கிறாள். என்னுடைய திறமைகள், சுபாவங்கள், எனக்கு பிடித்தவைகள் ஆகியவைகளை அறிந்த வெகு சிலரில் அவளும் ஒருத்தி. இருப்பினும் அவளிடத்திலும் மற்றவர்களிடத்திலும் நான் சொல்ல விரும்பாத என்னுடைய மறுபக்கம் சில உண்டு. நான் விரும்பத்தகாத நபராய், இரக்கமில்லாதவளாய், நேசிக்காதவளாய் இருந்த தருணங்கள் உண்டு.  

ஆனால் தேவனுக்கு என் முழு கதையும் தெரியும். மற்றவர்களிடம் பேசத்தயங்கும் விஷயத்தைக் கூட அவரிடம் நான் தயங்கமில்லாமல் பேசமுடியும். 

நம்முடைய சர்வ ஏகாதிபத்தியராகிய ஆண்டவரிடம் நமக்கு உள்ள உறவை சங்கீதம் 139 விவரிக்கிறது. அவருக்கு நம்மை முழுமையாய் தெரியும் (வச. 1). நம்முடைய வழிகளெல்லாம் அவருக்கு தெரியும் (வச. 3). அவர் நம்மை நம்முடைய குழப்பங்கள், கவலைகள், பாடுகள், சோதனைகள் ஆகியவைகளை எடுத்துக்கொண்டு அவரிடத்திற்கு வரும்படி அழைக்கிறார். நாம் அவரை முழுவதும் சார்ந்துகொள்ளும்போது, அவர் நம் வாழ்க்கையை மறுசீரமைக்கவும், நம்மை சோகத்தில் ஆழ்த்தும் நமது கதையை மாற்றி எழுதவும் அவரால் கூடும். 

மற்றெல்லாரைக் காட்டிலும் தேவன் நம்மை நன்றாய் அறிந்திருக்கிறார். அவர் இன்னும் நம்மை நேசிக்கிறார்! ஒவ்வொருநாளும் அவரிடத்தில் சரணடைந்து, அவரை முழுவதுமாய் அறிந்துகொள்ள முனையும்போது, அவருடைய நாமம் மகிமைக்காய் நம்முடைய கதையை மாற்றி எழுதுவார். அவர் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கும் ஒரு ஆசிரியர். 

தேவன் கொடுக்கும் மகிழ்ச்சி

திவ்யா வீதியில் நடக்கும்போதெல்லாம் எதிர்படுபவர்களை எல்லாம் புன்முறுவலோடு எதிர்கொள்வது வழக்கம். சிநேகிக்கும் முகங்களை பார்க்க விரும்புபவர்களை அவள் வரவேற்கும் விதம் அப்படியாக இருந்தது. பல வேளைகளில் பெரும்பாலானோரின் உண்மையான புன்னகை அவளுக்கு பதிலாக கிடைக்கும். முகக்கவசம் அணிவது கட்டாயப்படுத்தப்பட்டபின், அவளுடைய முகத்தை யாரும் பார்க்க முடியாததால், அவள் சிரிப்பையும் யாரும் பார்க்கமுடியாது என்பதை அவள் உணர்ந்தாள். அது கடினம் என்றாலும் “நான் அதை நிறுத்தப்போவதில்லை, நான் சிரிப்பதை மற்றவர்கள் என் கண்களின் மூலமாய் பார்க்கட்டும்” என்று தீர்மானித்தாள். 

இந்த தீர்மானத்திற்கு பின் ஒரு சிறிய அறிவியல் பூர்வமான காரியம் உண்டு. வாயின் இருபுறமுள்ள  தசைகளும் கண்களை சுறுக்கச்செய்யும் தசையும் இணைந்தே செயல்படும். இதனை “டுசென்னே” புன்னகை என்று அழைப்பர். அதற்கு, “கண்களால் சிரிப்பது” என்றும் அர்த்தம் உண்டு. 

நீதிமொழிகள், “கண்களின் ஒளி இருதயத்தைப் பூரிப்பாக்கட்டும்” என்றும் “மனமகிழ்ச்சி நல்ல ஓளஷதம்” (15:30; 17:22) என்றும் குறிப்பிடுகிறது. பெரும்பாலான நேரத்தில் தேவ பிள்ளைகளாகிய நம்மிடத்திலிருந்து வெளிப்படுகிற புன்னகை நாம் பெற்றிருக்கிற உன்னதமான மகிழ்ச்சியிலிருந்து வெளிப்படுகிறது. அது, அதிகமான பாரத்தை சுமக்கிற மக்களை உற்சாகப்படுத்தவும், வாழ்க்கையில் கேள்வியோடு பயணிக்கிறவர்களோடு பகிர்ந்துகொள்ளவும் நம் வாழ்க்கையிலிருந்து வழிந்தோடும் தேவனுடைய வரமாய் இருக்கிறது. நாம் உபத்திரவத்தைச் சந்திக்கும்போது என் மகிழ்ச்சி புன்னகையில் பிரதிபலிக்கும்.